பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை முன்பு ஒருவர் படுகொலை: போலீஸ் விசாரணை

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனை முன்பு தலையில் கல்லைப் போட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-19 06:20 GMT

பூந்தமல்லி காசநோய் மருத்துவமனையில் ஒருவர் படுகொலை.

பூந்தமல்லியில் காசநோய் மருத்துவமனை உள்ளது. இங்கு காசநோய்க்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை ஊழியர்கள் மருத்துவமனையை திறக்க வந்தபோது மருத்துவமனை வளாகத்தின் வராண்டா பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார்.

 ஊழியர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து ஆய்வு செய்த போது, இறந்து கிடந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? இறந்து கிடப்பவர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கட்டுமான பனியில் ஈடுபடும் வட மாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால் கட்டிட வேலையில் இங்கு ஏதாவது ஈடுபட்டாரா என்பது குறித்து கட்டுமான பணியில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

குடிபோதையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News