மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 குழந்தைகள் தந்தை முன் பலி

சென்னை மதுரவாயல் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 குழந்தைகள் தந்தை முன் பலியானார்கள்.

Update: 2022-01-13 02:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் செல்வம் (35) இவரது மனைவி சுமலதா(28). இவர்களுக்கு ஆதிரன்(4), கவுசிக்(2) மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது.

இவர்களின் உறவினர்கள் இன்று சபரிமலைக்கு செல்வதால், மகாலிங்கபுரத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

அனைவரும் காரில் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், சங்கர் மட்டும் மோட்டார் சைக்கிளில் செல்வதாக கூறியதை அடுத்து அவரது இரு குழந்தைகளுடன், இரு சக்கர மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறி மூன்று பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, செல்வத்தின் மகன்கள் ஆதிரன், கவுசிக் மீது ஏறியதில் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இரத்தவள்ளத்தில்  பரிதாபமாக பலியாகினர். செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் வலியாலும், தன் கண் முன்னே இரண்டு மகன்கள் பலியானதை கண்டும் கதறி அழுதார்.

இதனைக்கண்ட அப்பகுதியில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை  கைது செய்தனர்.

Tags:    

Similar News