குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் கைதி தப்பி ஓட்டம்

குட்கா பதுக்கல் வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கியதும் கைதி தப்பி ஓடிவிட்டார்.

Update: 2024-03-28 03:45 GMT

2018ல் 5டன் குட்கா பதுக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வந்த அடுத்த நொடி குற்றவாளி தப்பி ஓடினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் லிங்கம் டிரேடர்ஸ் எனும் தனியார் குடோனில் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 5 டன் குட்கா பொருட்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதன் உரிமையாளர் முத்து லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு பூந்தமல்லி கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2021ல் 3மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி பூவிருந்தவல்லி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு பூந்தமல்லிமாவட்ட கூடுதல் அமர்வு 2ல் நீதிபதி முருகேசன் வழக்கை விசாரித்தார்.

அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் புரட்சிதாசன் ஆஜராகி வாதிட்டார்.அப்போது குற்றம் நிருபிக்கப்பட்டதால் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த முத்துலிங்கத்துக்கு 3 மாதம் சிறை, 50000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்..இதனை கேட்ட குற்றவாளி முத்துலிங்கம் நைசாக போலீசாரிடமிருந்து நழுவி ஓட்டம் பிடித்துள்ளார்.இதையடுத்து பூந்தமல்லி காவல்துறையினர் தப்பி ஓடிய முத்துலிங்கத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News