பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி திடலில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தனியார் பள்ளி திடலில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி திடலில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், வட்டாட்சியர் மதிவாணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி மற்றும் கும்முடிபூண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி ஆகியோர் வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, தீயணைப்பு கருவி, இருக்கைகள், ஜன்னல், படிகட்டிகள் மற்றும் முதலுதவி பெட்டி போன்றவை சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சுமார் 422 பேருந்துகளில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டனர்.
பின்னர் பள்ளி பேருந்து ஓட்டுனர்களிடம் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்க வேண்டும். அதேபோல் ஏதாவது திடீர் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் அதனை சரி செய்து வாகனங்களை போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி இயக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர். மேலும் முதல் கட்ட ஆய்வின்போது வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் தரம் இன்றி இருந்த நான்கு பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்தனர்.