பழவேற்காட்டில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான குளியல்

பழவேற்காடு கடலில் புத்தாண்டை முன்னிட்டு தடையை மீறி படகு சவாரி, ஆபத்தான குளியலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-01-02 07:00 GMT

பழவேற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காலையில் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்ற பொதுமக்கள் தற்போது சுற்றுலா மையங்களில் குவிந்து வருகின்றனர்.

பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக கடலில் குளித்து மகிழ்ந்தும், படகு சவாரி செய்தும் செல்கின்றனர்.

மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் உள்ளிட்ட சென்னை கடற்கரைகளில் சென்னை போலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டி வருவதால் பழவேற்காடு கடற்கரைக்கு, திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்கள் ஏராளமானோர் பழவேற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர்.

சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் கடலில் ஆனந்த குளியலிட்டு உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கடல் மணற்பரப்பில் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி அருகே உள்ள கலங்கரை விளக்கத்தை பார்த்து சிறுவர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்றும் சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு, காணும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய திருவிழா போன்ற நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பழவேற்காட்டிற்கு வருவார்கள் என்பதால் தடை செய்யப்பட்ட படகு சவாரி செல்லாமல் இருப்பதை காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள்.

இந்த ஆண்டு காவல்துறையின் கெடுபிடி இல்லாததால் மறைமுகமாக நடக்கக்கூடிய படகு சவாரி வெட்டவெளிச்சமாக பழவேற்காட்டில் அரங்கேறி வருகிறது. பழவேற்காடு வரும் சுற்றுலா பயணிகள் படகில் முகத்துவாரம் வரை சென்று அழகை ரசித்து திரும்புகின்றனர். ஏரியில் படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ள சூழலிலும் உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் போன்ற கவசங்கள் ஏதுமின்றி ஆபத்தான முறையில் இந்த படகு சவாரி நடைபெற்று வரும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News