சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்…

Siruvapuri Shri Balasubramaniaswamy Temple -சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-31 05:35 GMT

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

Siruvapuri Shri Balasubramaniaswamy Temple-கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 7 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது உண்டு. அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று நடைபெற்றது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 6 ஆம் நாளான நேற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

முருகப்பெருமான் முக்கிய வீதிகளில் வலம் வந்து சூரனை எதிர்கொண்டு வேல் வாங்கி சண்முகராக வலம் வந்து ஆட்டுக்கடாய், மான், புலி, யாளி, யானை என பல்வேறு ரூபங்களில் வந்த சூரபத்மனை வதம் செய்தார். வதம் செய்யப்பட்ட நிலையில் சூரன் மாமரமாக தோன்றிய சூரனை பக்தர்கள், கிராம மக்கள், கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் சேவலும் மயிலுமாக கட்சி தந்த முருகப்பெருமாள், அசுரனை கொல்லாமல் அரக்கக் குணத்தை அழித்து ஆறுமுகன் அவருடனே சேர்த்து கொண்டார்.

இந்த அற்புத நிகழ்வை சிறுவாபுரி கோயிலில் திரண்டு இருந்த பெரியபாளையம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி திருவள்ளுவர், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு கண்டுகளித்தனர்.

கோயில் வளாகத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் நடனமாடினர். தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் நிறைவாக முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண விழா கோயிலில் நடைபெறுகிறது.

சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இனைஆணையர் லட்சுமணன், கோவில் தக்கார் சித்ராதேவி, செயல் அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கும்பாபிஷேகம்: பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தொடர்ந்து ஆறு வாரங்கள் நெய் தீபம் ஏற்றி கோயிலை சுற்றி வளம் வந்து சுவாமியை தரிசனம் செய்தால் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பின்னர் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் பூஜை நடைபெற்றது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News