பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது
பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். வடமாநில தொழிலாளர்கள் 3பேர் கைது. கிடங்கு உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் குடோன்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 10டன் எடைகொண்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அபினேஷ்குமார், ஜெய்சிபஸ்மான், பிரகாஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்து தலைமறைவான கிடங்கு உரிமையாளர் ஜோஷுவா என்பவரை தேடி வருகின்றனர்.
இதே போல கவரைப்பேட்டை அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியில் கேட்பாரற்று கிடந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.5டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்