கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலம் செல்ல எதிர்ப்பு: கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

பொன்னேரி அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினரின் பகுதிக்கு சாமி ஊர்வலம் செல்ல மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-01 03:15 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு பேட்டை பகுதியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் திருவிழாவின் போது தினந்தோறும் சாமி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட பிரிவினர் உள்ள கிராமத்திற்கு திரௌபதி அம்மன் சாமி ஊர்வலம் செல்ல மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதிய பாகுபாடு காரணமாக பிற சாமிகளை தங்களது கிராமத்திற்கு அனுப்பும் கோவில் நிர்வாகிகள், திரௌபதி அம்மன் சாமி ஊர்வலத்தை அனுப்ப மறுப்பதாக குற்றம் சாட்டினர். தகவலறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசம் பேசி போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களது கோரிக்கைகள் குறித்து மனு பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து கோவில் திருவிழா பிரச்சனை இருபிரிவனரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சாதிய பாகுபாடு காட்டி சாமி ஊர்வலத்தை தடை செய்யக் கூடாது என வட்டாட்சியர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, திரௌபதி அம்மன் சாமி ஊர்வலத்தை அனுப்ப ஒப்புக் கொண்டனர். கோவில் திருவிழா பிரச்சனை தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News