சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த முதல் நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-08-23 06:45 GMT

சிறுவாபுரி முருகன் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிறுவாபுரியில் 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 2ஆம் நாளான இன்று சிறுவாபுரியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மண்டல பூஜை ஒருபுறம், கும்பாபிஷேகம் முடிந்த முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. இலவச தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வழக்கமாகவே செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

Tags:    

Similar News