ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கணவர் கொலை வழக்கில் கொலைக்கு திட்டம் தீட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-27 09:13 GMT
கொலை செய்யப்பட்ட  சுமன் மற்றும் கைதான சங்கர்.

பொன்னேரி அருகே துணை தலைவரின் கணவரான அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கொலைக்கு திட்டம் தீட்டிய ஊராட்சி மன்ற தலைவர் 5மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த விச்சூர் ஊராட்சிமன்ற துணை தலைவராக இருப்பவர் வைதேகி.இவரது  கணவர் சுமன். அதிமுக பிரமுகரான சுமன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மணலி புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விச்சூர் ஊராட்சிமன்ற தலைவராக சங்கர் என்பவர் பொறுப்பு வகித்து வரும் நிலையில் சுமனின் அண்ணனான சங்கருக்கும் சுமனுக்கும் இடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. கொலை நடந்த நாள் முதலே சுமன் கொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரும், விச்சூர் ஊராட்சி மன்ற தலைவருமான சங்கர் தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என துணை தலைவர் வைதேகி தொடர்ந்து காவல்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்தார்.

இந்த கொலை தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த 8பேரை மணலி புதுநகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கந்தன் என்பவரை கடந்த ஜனவரி மாதம் காவல்துறையினர் கைது செய்தபோது கொலைக்கு முக்கிய காரணம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என கந்தன் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஊராட்சிமன்ற தலைவர் சங்கர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தஞ்சாவூரில் பதுங்கி இருந்த சங்கரை   தனிப்படை போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News