பழவேற்காடு: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

பழவேற்காடு பசியாவரம் கிராமம் அருகே மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் நூலிழையில் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

Update: 2021-06-10 09:28 GMT

வீட்டின் முன்பு விழுந்துள்ள மின் கம்பி

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில் உள்ள பசியாவரம் கிராமத்தில் லெவன்கேஜ் எனப்படும் உயர்மின் அழுத்தக் கம்பி சென்று கொண்டிருக்கிறது.  30 வருடங்களுக்கு முன்னால் இணைக்கப்பட்ட இந்த மின்சார இணைப்பு லைன்கள் முழுவதும் தற்போது துண்டு துண்டாக இணைக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்சார துறையினருக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீர்செய்யவில்லை.

இந்நிலையில் இன்று காலை பசியாவரம் கிராமத்தை சேர்ந்த ராதிகா என்பவர் வீட்டின் வெளியே மின் வயர் திடீரென அறுந்து விழுந்து எரிந்தது. நல்ல வேளையாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உயிர் தப்பினர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், சம்மந்தப்பட்ட மின்சார துறைக்கு தகவல் கூறினார்.

1 மணி நேரம் ஆகியும் மின்சாரம் துறையினர் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்யாமல் கிடப்பில் போட்டதால் கிராம மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அதே பகுதியில் மற்றொரு லைனில் கிளாம்ப் உடைந்து விழுந்து விடும் நிலையில் தொங்கிக் கொண்டு இருப்பதால் இதனை உடனே மின்சார துறையினர் சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், உயிர்கள் பலியாவதற்கு முன்பு 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த மின் கம்பிகளை மாற்றிவிட்டு புதிய இணைப்புகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மேலோங்கியள்ளது.

Tags:    

Similar News