பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-23 03:45 GMT

தனலட்சுமி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் - முத்துலட்சுமி தம்பதியரின் மகள் ஆர்த்தி என்கிற தனலட்சுமி (வயது 20). இவருக்கும் சிறுவாக்கம் சானார்பாளையத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

தனலட்சுமியை அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக தமது பெற்றோரிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். தன்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுமாறு பெற்றோருக்கு வாட்சப்பில் ஒலிசெய்தியும் அனுப்பியுள்ளார். அவரது பெற்றோரும் தங்களது மகளை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தனலட்சுமி கணவர் குடும்பத்தினர் அவரது தந்தைக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். சிறிது நேரத்தில் உங்களது மகள் இறந்து விட்டதாக மீண்டும் போன் செய்து கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் மகளின் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகளது சடலத்தை வைத்துள்ளனர்.

இதனையடுத்து தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வைத்தனர்.

தமது மகளை பணம், நகை கேட்டு நச்சரித்ததாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களது மகளை கணவர் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சார் ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News