மீஞ்சூர் அருகே மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

மீஞ்சூர் ராமா ரெட்டி பாளையம் மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

Update: 2024-09-08 10:45 GMT

கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியர்கள். 

பொன்னேரி அருகே பழமைவாய்ந்த மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ராமாரெட்டிபாளையம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பக்தர்கள் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், பூரணாகுத்தி நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.


இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு நறுமண திரவங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News