உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளர்: தீயணைப்பு துறை மீட்டது

உணவகத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளரை தீயணைப்பு வீரர்கள் பூட்டை உடைத்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Update: 2022-01-23 02:30 GMT

உணவகத்தில் இரண்டு நாட்களாக மயங்கி கிடந்த உரிமையாளரை மீட்ட தீயணைப்பு துறையினர் 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக்கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான உணவகம் இயங்கி வருகிறது. பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு இந்த உணவகத்தின் உரிமையாளர் மாரிதுரை என்பவர் தான்  கடந்த 2 தினங்களாக  உணவகத்தின் உள்ளே வைத்து பூட்டப்பட்டதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூட்டப்பட்டிருந்த ஓட்டலின் பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கே மயங்கிய நிலையில் இருந்த ஓட்டல் உரிமையாளர் மாரித்துரையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டல் உரிமையாளரை உள்ளே வைத்து பூட்டியது யார் என்பது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News