ஊழல் சின்னங்களை ஒழித்து தள்ள வேண்டும் -சீமான் பேச்சு.
ஊழல் சின்னங்களை ஒழித்து தள்ள வேண்டும். இலையில் மட்டுமே பச்சை இருப்பதாகவும், நாட்டில் பச்சை இல்லை எனவும், சூரியன் சின்னத்தில் மட்டுமே உள்ளது, நாடு இருட்டில் இருப்பதாக சீமான் சாடல். பிரச்சனைகள் குறித்து மனு வாங்குகிறார்கள், ஆனால் பிரச்சனையே அவர்கள் தான் எனவும் சீமான் பேசினார்.;
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் இருந்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய தாவது .
குன்றக்குடி அடிகளார் கூறியது போல நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். இலவசங்களை கொடுத்து உழைக்காமல் வாழ்வதற்கு மக்களை தயார் செய்வது எவ்வளவு இழிவான செயல் . எவ்வளவு காலத்திற்கு இலவச அரசியை கொடுப்பீர்கள், இலவச அரசி கொடுக்க முடியாமல் போனால் மக்களின் கதி என்ன என சீமான் கேள்வி எழுப்பினார்.
கார் இல்லை, செல்போன் இல்லை என்று எந்த நாட்டிலும் புரட்சி வந்ததில்லை எனவும், நீர் இல்லை, சோறு இல்லை என்று தான் புரட்சி வெடித்துள்ளதாக தெரிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருவது 130கோடி மக்களுக்கும் சேர்த்து தான் என சீமான் தெரிவித்தார்.
100கோடி மக்களுக்கு செல்போன் கொடுக்கும் திட்டத்தால் பயன்பெறுவது தனியார் முதலாளிகள் மட்டுமே என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போது அதிகரித்து பின்னர் சற்று குறைக்கிறார்கள் என்றார்.
வெங்காயம், உருளை, தக்காளி, பயறு வகைகளை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் எடுத்து விட்டதால் அவை அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்றாகி விடுமா என வினவினார். உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி 10ரூபாய் பொருளை 100ரூபாய்க்கு விற்றாலும் மக்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.
மக்கள் யாரும் இனிமேல் இந்தியா நமது நாடு என கூற முடியாது என்றும், அதானியும், அம்பானியும் தான் இந்தியாவை இனி உரிமை கொண்டாட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்தார்.
தனிநபரின் குடும்ப சொத்தாக இருந்த நாட்டை மாற்றியதே மத்திய அரசின் சாதனை என தெரிவித்தார்.ஆதிகாலத்தில் இருந்த பண்ணை முறை போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்களை அடிமையாக்கும் முறை தற்போது மீண்டும் கொண்டு வரப்படுகிறது என்றார்.
நாம் தமிழர் கட்சி ஆள் மாற்றம், அரசியல் மாற்றம் மட்டுமல்ல, அமைப்பு அடிப்படையை மாற்ற வரும் புரட்சிவாதிகள் நாங்கள் என தெரிவித்தார். 1949ல் தொடங்கி 1967ல் ஆட்சி அமைத்தது திமுக எனவும்
ஓராண்டிலேயே அதனை தோற்றுவித்த தலைவர் மறைந்தார் எனவும் அதற்கு பிறகு அமர்ந்த தலைவரால் தான் தமிழகம் இப்படி ஆகிவிட்டது என சாடினார். திமுக ஆட்சியில் வாழ்ந்து விட்டீர்கள், அதிமுக ஆட்சியில் வாழ்ந்து விட்டீர்கள், உங்களுடைய பிள்ளைகளான எங்களது ஆட்சியிலும் ஒரு முறை வாழ்ந்து பாருங்கள் எனவும் வாய்ப்பு கொடுங்கள் எனவும், சரியில்லை என்றால் தூக்கி வீசிவிடுங்கள் என்றார்.
பூமி சொர்கமாகவும், உலகின் தலைசிறந்த நாடாகவும், பசி என்ற வார்த்தை இருக்காது எனவும், வேலையின்மை இருக்காது எனவும், ஜாதிமத பெருமை பேச நேரம் இருக்காது என கூறினார்.
ஊழல் சின்னங்களை ஒழிக்க வேண்டும் எனவும், இலையில் பச்சை உள்ளது என்றும் நாட்டில் எங்கு பச்சை உள்ளது என வினவினார். சின்னத்தில் சூரியன் இருக்கிறது, நாடு இருட்டில் உள்ளது எனவும், விடியல் தர போவதாக சொல்பவரிடம் இருந்து தான் நாம் விடியலை பெற வேண்டியுள்ளதாக சீமான் தெரிவித்தார்.
உங்களுக்கு என்ன பிரச்சனை மனு கொடுக்குமாறு கேட்பதாகவும், எங்களுக்கு பிரச்சனை நீங்கள் தான். இவ்வளவு பிரச்சினைகளும் உங்களால் தான் உருவானது என்றார். ஆட்சியில் இல்லாத நான் என்ன பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என கேட்கலாம் எனவும், அனைத்து பிரச்சினைகளையும் தந்த வள்ளல்கள் நீங்கள் தான் என சாடினார்.
எந்த கடையில் உணவு, உடை நன்றாக இருக்கும் என தேடும் போது 5ஆண்டுகள் நாட்டை ஆளும் தலைவரை தேட வேண்டாமா என வினவினார். கருணாநிதி, ஜெயலலிதா என இருவர் தவிர வேறு யாரும் இல்லை என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு வந்த நிலையில் தற்போது எங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நாங்கள் கோடிகளை கொட்டவில்லை எனவும் கொள்கைகளை கொட்டுகிறோமே என்றார். ஒரு முறை போட்டு பாருங்க ஓட்ட, அப்புறம் பாருங்க நாட்ட என கூறி விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு சீமான் கேட்டு கொண்டார்.