பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மீனவர்களுக்கு இடையே மோதல்

பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் மீனவர்களுக்கு இடையே மோதல் உண்டானது.

Update: 2022-12-19 07:38 GMT

பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மீனவர் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த ஓராண்டாக பிரச்சனை நீடித்து வருகிறது. இரு மீனவர் குடும்பங்கள் இடையே கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு தரப்பு மீனவர்கள் காத்திருந்த நிலையில் மற்றொரு தரப்பு வராததால் திங்கட்கிழமை இருதரப்பு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் இரு தரப்பு மீனவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட நிலையில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4பேர் காயமடைந்துள்ளனர். இரு தரப்பிலும் 4மீனவர்கள் காயம் அடைந்த நிலையில் போலீசார் அவர்களை மீட்டு பழவேற்காடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோதலில் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்களின் மோதல் காரணமாக ஆண்டிக்குப்பம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை, மீன்வளத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நாளை ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் இன்று கிராமத்தில் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News