சென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் உதவிப் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் உதவிப் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-21 03:53 GMT

தற்கொலை நடந்த இடம் அருகே திரண்ட சக ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (36). இவர் வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அனல்மின் நிலைய அதிகாரிகளின் அரசு குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து கொண்டு வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று மாலை அனல் மின் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் ஹரிகிருஷ்ணனின் மனைவிக்கு போன் செய்து ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன் மனைவி இளவரசி வேலைக்கு தான் சென்றுள்ளார், வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்து உடனடியாக அனல் மின் நிலையத்திற்கு வந்து கேட்டுள்ளார். நேற்று வேலைக்கு வந்தவர் திடீரென காணமால் போனதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இளவரசி மீஞ்சூர் காவல் நிலையத்தில் காணாமல் போன தமது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காணாமல் போன உதவிப் பொறியாளரை கண்டுபிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் அனல் மின் நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைக்காக வந்தவர் எங்கு சென்றார் என மர்மமாக இருப்பதாவும், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் முறையாக பதிலளிக்கவில்லை என புகார் தெரிவித்தனர். பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் தாங்காமல் இங்கு மேற்கொண்டு பணியினை தொடர முடியவில்லை எனவும், குடும்பத்தாருடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை, எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன், இதற்கு யாரும் காரணம் இல்லை என ஹரிகிருஷ்ணன் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனல்மின் நிலையத்தில் இருந்து கைப்பற்றியதாக அதிகாரிகள் மீஞ்சூர் காவல்துறையினரிடம் அளித்துள்ளனர். இந்த கடிதத்தில் இருப்பது ஹரிகிருஷ்ணன் கையெழுத்து கிடையாது என அவரது குடும்பத்தினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல்கள் கொண்டு பொறியாளர் ஹரிகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன அனல்மின் நிலைய பொறியாளர் ஹரிகிருஷ்ணன் அனல் மின் நிலையத்தில் 2வது மாடியில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து தூக்கிட்ட நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அனல்மின் நிலைய படிக்கட்டுகளில் ஆங்காங்கே ரத்தக் கறை இருப்பதாகவும், பொறியாளரை அடித்து கொன்று விட்டு தூக்கில் மாட்டிவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து மர்மமான முறையில் நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து மீ்ண்டும் அனல் மின் நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவிப் பொறியாளர் ஒருவர் அனல் மின்நிலையத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் அனல்மின் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News