பொன்னேரியில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2024-04-03 08:07 GMT

பொன்னேரியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்திய திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும் வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீதவாக்குப்பதிவை செலுத்திட வலியறுத்தி ஊழியர்கள் ‘100சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை’ என ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. ‘மக்களாட்சி மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய, நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்புகளை நிலை நிறுத்துவோம் என்றும்,ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு துாண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம்’ என உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் பொன்னேரி நகராட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தேர்தல் குறித்து உறுதிமொழி வாசகத்திற்கு கீழ் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News