டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டர் 'சஸ்பெண்ட்'

பணியின் போது ஏற்பட்ட தகராறில், டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

Update: 2022-11-30 01:00 GMT

மீஞ்சூரில், சக டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியின் போது ஏற்பட்ட தகராறில் டாக்டரை தாக்கிய விவகாரத்தில், மற்றொரு டாக்டர் பணியிடை நீக்கம் செய்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்களாக டாக்டர்கள் டேவிட் செந்தில்குமார் மற்றும் நிஜந்தன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 26ம் தேதி பணியின் போது மாற்றுப்பணிக்காக டாக்டர் ஒருவரை, அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல மருத்துவ அலுவலர் நிஜந்தன் அனுப்பியதாகவும், ஆனால், மற்றொரு மருத்துவ அலுவலரான டேவிட் செந்தில்குமார், அந்த டாக்டரை அனுப்பாததால், அதனை கேட்ட நிஜந்தனுக்கும், டேவிட் செந்தில்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் கைகலப்பாக மாறியது. இதில் நிஜந்தனை, டேவிட் செந்தில்குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த நிஜந்தன் மீஞ்சூர் போலீசில், இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து மருத்துவ அலுவலர் டேவிட் செந்தில்குமார் மீது, மீஞ்சூர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய மருத்துவ அலுவலர் டேவிட் செந்தில்குமார் மீது, துறைரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலுயுறுத்தி சக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை மற்றும் மீஞ்சூர் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பணியின் போது மற்றொரு டாக்டரை தாக்கிய டாக்டர் டேவிட் செந்தில்குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Similar News