சென்னை - கும்மிடிப்பூண்டி ரயிலில் கற்களை வீசி ரகளை செய்த 4 மாணவர்கள் கைது
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயிலில் கற்களை வீசி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது. வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில் கத்தியை கொண்டு தாக்கிக்கொண்டனர். அபாய சங்கிலியை பிடித்து இழுத்தபடி ரயில் மீது கற்களை வீசி தாக்கி நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு, ரயில்வே போலீசுக்கும் கொடுத்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் 4பேரை பிடித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் ரயில் நிலைய அதிகாரி நரசிம்மன், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான அஜித், விக்னேஷ், ராஜி, செல்வகணபதி ஆகிய 4பேர் மீது இந்திய தண்டசனை சட்டம், 147 கும்பல் கூடுதல், 148 ஆயுதங்களுடன் கூடுதல், ரயில்வே சட்டம், 141 அவசர கால செயினை இழுத்தது, ரயில்வே சட்டம் 153 கல்வீசி பயணியரை அச்சுறுதியது மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பு என, 5பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி 4பேரையும் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து 4பேரையும் போலீசார் பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.