வயிற்றுப்போக்கு காரணத்தினால் 12 ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த 12ஆம் வகுப்பு மாணவி வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.

Update: 2022-06-28 03:15 GMT

மாணவி ஹரிணிகா.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் திருவாரூரை சேர்ந்த ஹரிணிகா (16) என்ற மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பள்ளி நிர்வாகம் பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் விடுதியில் வழங்கிய உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் மாணவி வயிற்றுப்போக்கால் அவதியுற்று உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த மாணவி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News