கொலை செய்யப்பட்டவர் உடலை வாங்க மறுப்பு

Update: 2021-01-05 06:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல் டாஸ்மாக் கடை அருகே நேற்று கழிவுநீர் ஊர்தி ஓட்டுநர் ராஜசேகர் என்பவரை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜசேகர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக ராஜசேகரை கொலை செய்த தேவராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட ராஜசேகர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும், மீஞ்சூரில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சா பயன்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியும் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் இருந்து வந்த அமரர் ஊர்தியினை மடக்கி பிணத்தை வாங்க மறுத்து அரியன்வாயல் மற்றும் மீஞ்சூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News