100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-29 02:45 GMT

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த நெய்வேலி ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் 100நாள் பணி அடையாள அட்டை வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் வட்டார வளர்ச்சி அலுவகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் கன்னியப்பன் தலைமையில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வாயிலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ஊராட்சிகளில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார அடிப்படை தேவைக்கான 100நாள் பணிகளின் அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 10நாட்களில் 100 நாள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாய மாவட்ட தலைவர் ஏ.ஜி. கண்ணன், மாவட்ட குழு கங்காதரன், வட்டச்செயலாளர் அருள், வட்டத் தலைவர் குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News