சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர கிராம மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே செங்கரை ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-10-09 08:00 GMT

எல்லாபுரம் ஊராட்சியில் காணப்படும் சேதமடைந்த சாலை

ஊத்துக்கோட்டை அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சேதமடைந்த சாலையை அகற்றி புதிய தார் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கண்டுகொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கரை ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த 2005-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலானதால் மிகவும் சேதமடைந்த குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால்  பொதுமக்களும் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

மேலும் செங்கரை ஊராட்சி அருகே சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது.  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த சாலை வழியாகத்தான் பணிக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், சாலை சேறும் சகதியுமாக இருப்பதால், கிராமத்திற்கு வராமல் ஊருக்கு வெளியிலேயே இறக்கி விட்டு செல்வதால், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால், சுகாதார கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகி விஷ காய்ச்சல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மேலும் சாலையின் இந்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் அதற்கும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 

விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என கிராம மக்கள் கவலை தெரிவித்தனர். எனவே இந்த சாலையை சீரமைப்பது குறித்து தற்போதாவது மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த சாலையை அகற்றி புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News