வீட்டுமனை பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-11-01 06:35 GMT
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும், தேசிய மகாத்மா காந்தி 100.நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தியும் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பன்பாக்கம், அப்பாவரம், ராஜாபாளையம், அரியத்துறை, நத்தம், திருப்பேடு, மேல்முதலம்பேடு, போரூர் புதுநகர், சிறுபுழல்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் ஏழை எளிய மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது தமிழக அரசே ஏழை எளியவர்களுக்கு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கு என கோஷம் எழுப்பினார்கள். அந்த கோரிக்கையை வலியுறுத்தி  கோரி சங்க நிர்வாகிகள் பேசினார்கள். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்துவது பற்றியும் அப்போது எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் 100நாள் வேலையை தொடர்ச்சியாக தர வலியுறுத்தியும், 281 ரூபாய் கூலியை வழங்கிட தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரிடம் வட்டாட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து விரைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கண்ணன் உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்பது மேற்கண்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இந் கோரிக்கை தொடர்பாக அவர்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்  மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News