மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது போலீசார் வழக்கு
பெரியபாளையம் அருகே மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
பெரியபாளையம் அருகே மின்மாற்றி அருகே இருந்த பள்ளத்தை மூட சென்ற மின்வாரிய ஊழியர்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82.பனப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியை இடம் மாற்றி தரும்படி ஹரிசந்திரன் என்பவரது மகன் சுப்பிரமணி விண்ணப்பித்ததன் பேரில் அதற்கான மதிப்பீட்டு தொகையை மின்வாரிய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காமல் தான் கூறும் தொகையை வழங்குமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து மின்மாற்றியின் அருகே பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டதை அறிந்து மின்வாரிய ஊழியர்கள் அதனை மூட சென்றுள்ளனர். அப்போது ஹரிச்சந்திரன் அங்கு வந்து மின்வாரிய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் ஹரிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.