ஆன்லைனில் கடன் தருவதாக கூறி மோசடி: ஏமாற்றத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பெரியபாளையத்தில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியதால் தனியார் நிறுவன ஊழியர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

Update: 2022-04-22 04:15 GMT

பெரியபாளையத்தில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியதால் தனியார் நிறுவன ஊழியர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரசாத் (35). இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர் தனது குடும்ப தேவைக்காக செல்போனில் உள்ள ஆன்லைன் கடன் ஆப் (kiva loan app) மூலமாக கடனுதவி பெற விண்ணப்பித்துள்ளார். 6லட்ச ரூபாய் கடனுதவி கேட்டு விண்ணப்பித்த போது 30% தொகையை முன் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து அந்த தொகையையும், கடன் தொகையையும் சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைத்து விடுவதாக கூறப்பட்டதாம்.

இதை நம்பிய பிரசாத்  சுமார் 86ஆயிரம் ரூபாய் வரை செல்போனில் பணபரிவர்தனை மூலமாக கடன் தரும் நிறுவனத்திற்கு செலுத்தி உள்ளார். 86ஆயிரம் ரூபாய் பணத்தை பிரசாத் கட்டிய பின்னர் நேற்று மாலை திடீரென ஆன்லைன் கடன் ஆப் நிறுவனம் உங்களுக்கு கடனுதவி தர முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாத் இதுகுறித்து தமது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என நண்பர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

நேற்றிரவு வரை நீண்ட மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பிரசாத் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை பிரசாத் மனைவி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்ற போது அங்கு பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்ச அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் கடன் ஆப் மூலம் பணம் ஏமாற்றிய மன உளைச்சல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News