கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியிடம் நகை திருட முயன்றவர் அடித்துக்கொலை
வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரை பொதுமக்கள் அடித்து உதைத்தது கட்டி வைத்தனர்;
பைல் படம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கெட்டனமல்லி கிராமத்தில் வடுவம்மாள் (80) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தமது மகன் ரமேஷ், மகள்கள் செல்லம்மாள் மற்றும் சாந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்றிரவு மகன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், இரண்டு மகள்கள் வீட்டிலும் மூதாட்டி வடுவம்மாள் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கிவிட்டு வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் மூதாட்டி கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது கொள்ளையனிடம் இருந்து சுதாரித்த மூதாட்டி வீட்டின் வெளியே வந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த திருட வட மாநிலத்தவர் மூவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்த வட மாநிலத்தைச் சார்ந்தவர் ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில் இருவர் அங்கிருந்து தப்பியோட்டம் பிடித்தனர். இதனையடுத்து அங்கு சிக்கிய வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40வயது மதிக்கத்தக்க நபரை பொதுமக்கள் அடித்து உதைத்தது கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த நபரின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடையில் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீட்டில் புகுந்து திருட முயன்று தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.