பெரியபாளையம் அருகே பைக்கில் வந்த நபர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு
சிறு பாலம் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் வந்த நபர் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
விபத்தில் உயிரிழந்த வினோத்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த உள்ள ஆரணி, ஜி.என்.செட்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (33).இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர், வெங்கல் அருகே தாமரைப்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணி செய்து வந்தார். இரவு வேலை முடிந்து வினோத்குமார் மோட்டர் பைக்கில் ஆரணியில் உள்ள அவரது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பெரியபாளையம் - தாமரைப்பாக்கம் சாலை இடையே, வடமதுரை பெரிய காலனி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, மழைநீர் செல்ல சிறிய பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்காகத் தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகை வைக்காததே இந்த உயிர் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் விபத்தில் உயிர் பலி ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.