பெரியபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் ஆய்வு

பெரியபாளையத்தில் உணவகங்கள், பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Update: 2024-07-07 06:45 GMT

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். 

பெரியபாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு மூன்று கடைகளில் ரசாயனம் கலந்த பானிபூரிகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள்,பாணி பூரி கடைகள்,ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்,தள்ளுவண்டி கடைகள்,சாலை ஓர உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏரோமியா அந்தோணி ராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் எல்லாபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரி கார்மேகம் கடை,கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான சிக்கன், பீப், அளவுக்கு அதிகமான அளவில் கலர் சேர்க்கப்பட்ட காலிஃப்ளவர், உடலுக்கு தீங்கும் விளைவிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட பாணி பூரி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் தலா ரூ.2,000-ம் வீதம் மொத்தம் ரூ.6,000-ம் அபராத தொகையை வசூல் செய்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்த சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News