ஊத்துக்கோட்டை அருகே 20-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு: இருவர் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே 20-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-12-19 03:45 GMT

வயிற்றுப்போக்கால் சிகிச்சை பெற்றுவரும் மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முனுசாமி (50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதனால் பேரண்டூர் கிராமத்தில் சுகாதார துறையினர் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (92) என்பவர் உயிரிழந்தார். பேரண்டூர் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒலிப்பெருக்கி மூலம் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், தூய்மையாக இருக்கவும் அறிவுறுததி வருகின்றனர்.

சுகாதார துறையினருடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கடைகளில் ஆய்வு நடத்தினர். அந்த கிராமத்தில் குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார துறையினர் வீடு வீடாக ஆய்வு செய்து வருகின்றனர். வயிற்றுப்போக்கு குறித்து தகவல் தெரிவிக்க பொது மக்கள் 9514132348 என்ற ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News