திருவள்ளூர் அருகே மகள் சாவில் மர்மம்: தாய் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் அருகே மகள் சாவில் மர்மம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.;
மர்மமாக இறந்த கவுசல்யா.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒதப்பை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பூபாலன் (38). இவருக்கும் மாளந்தூர் கட்டுப்புடி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் கவுசல்யா (26) என்பவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு நிவாஸ் (7) என்ற மகன் , தேவசேனா (5) என்ற மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று கணவனை வேலைக்கு செல்லவில்லையா என மனைவி கேள்வி கேட்டுள்ளார். இதனால் மீண்டும் நேற்று முன்தினம் சண்டை போட்டுள்ளனர். அன்று இரவு கவுசல்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையறிந்த கவுசல்யாவின் தாய் நாகவல்லி பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் தன் மகள் சாவில் மர்மம் உள்ளது என புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்
.