ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஆந்திராவிற்கு வேனில் கடத்த முயன்ற 2.4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-09-22 06:45 GMT
ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் பிடிபட்டார். 

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற 2.4டன் ரேசன் அரிசியை திருவள்ளுர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, திருவள்ளுர் அலகு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில் போலிசார் கும்மிடிபூண்டி தாலுக்கா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே தீவிரமாக வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த தமிழக பதிவெண் கொண்ட மினி சரக்கு ஏற்றி செல்லும் வேனை மடக்கி பிடித்து தீவிரமாக சோதனை செய்தபோது. அதில் சுமார் 50 கிலோ எடைக்கொண்ட 48 மூட்டைகளில் மொத்தம் 2.400 டன் தமிழக பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கும் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்த சென்னை, கொருக்குபேட்டை, எண்.954, ஜெஜெ நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 29) என்பவரை கைது செய்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கைப்பற்றப்பட்ட 2.4 டன் கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவள்ளூர் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Similar News