அது என்னங்க, பயறு ஒண்டர்..? உளுந்து விவசாயிகளே..! கவனிங்க..!

அட்மா திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார உளுந்து விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி விநியோகம் செய்யப்பட்டுளளது.

Update: 2024-04-10 14:21 GMT

பயறு ஒண்டர் பயிர் வளர்ச்சி ஊக்கி வழங்கும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் இளங்கோ, வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், ஜெரால்டு, சுரேஷ்,ராமு, தினேஷ் ஆகியோர்.

மதுக்கூர் வட்டாரத்தில் கோடை உளுந்து பயிர் மார்ச் மாதத்தில் 200 எக்டருக்குக்கு மேல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட உளுந்து தற்பொழுது பூக்கும் பருவத்தில் உள்ளது. விவசாயிகள் பொதுவாக 35 மற்றும் 50 ஆம் நாட்களில் டிஏபி இலைவழி உரம் தெளிப்பது உண்டு. டிஏபி இலைவழி உரத் தெளிப்புக்கு மாற்றாக வழங்கப்படும் பல்சஸ் ஒண்டர் பூக்கள் உதிர்வதை தடுக்கும்.

20சத மகசூல் அதிகரிக்கிறது

வறட்சி தாங்க உதவும் இந்த இலைவழி தெளிப்பின் மூலம் உளுந்து பயிருக்கு பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்து கலந்து கிடைப்பதால் பூக்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டரை 20லிட்டர் நீரில் கலந்து டேங்குக்கு 1 ஒரு லிட்டர் கரைசலில் ஒன்பது லிட்டர் நீர் கலந்து மாவுக்கு ஏழு டேங்கு தெளிக்க வேண்டும்.

காலை நேரத்தில் 9 முதல் 10 மணிக்கு முன்னரும், மாலை வேளையில் வெயில் தாழ்ந்த நாலு மணிக்கு பின்னரும் தெளிப்பது மிக அவசியம். இலைத் துளைகள் மாலை நேரத்தில் மட்டுமே திறந்திருப்பதால் பயறு ஒண்டர் எளிதாக உளுந்து பயிரினால் கிரகிக்கப்பட்டு நாலு மணி நேரத்தில் அதன் விளைவு தெரியத் தொடங்கும்.

நாலு மணி நேரத்தில் இலைகள் கரும்பச்சை நிறத்துக்கு மாறி அதிக ஒளிச்சேர்க்கை நடப்பதால் பயிர்கள் வேர் மூலம் உறிஞ்சும் சத்துகளின் அளவு அதிகரிக்கிறது. அதிக வேர் முடிச்சுகள் உருவாகிறது. அதன் விளைவாக பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் பூக்கும் பருவத்தில் வழங்கப்படுவதால் பூக்கள் கொட்டாமல் அனைத்தும் காய்களாக மாறும்.

கூடுதல் மகசூல் 

450 ரூபாய் செலவழிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 100 லிருந்து 150 கிலோ வரை கூடுதலாக உளுந்து மகசூல் கிடைக்கும். போரான் போன்ற நுண்ணுட்டச் சத்துகளையும் பேருட்ட சத்துக்களும் கலந்த பயறு ஒண்டர் எனும் நுண்ணூட்டம் கலந்த இந்த பயிர் வளர்ச்சி ஊக்கி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பயிர் வினை இயல் துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் பத்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயறு ஒண்டர் பயிர் வளர்ச்சி ஊக்கி வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், ஜெரால்டு, சுரேஷ்,ராமு, தினேஷ் மூலம் பயறு ஒண்டர் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி வழங்கப்பட்டது.

அட்மா திட்ட அலுவலர்கள் அய்யாமணி, ராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தனர்.

Tags:    

Similar News