பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

Update: 2022-03-07 09:45 GMT

பைல் படம்

பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்காடு கிராம ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.பூபேஸ்குப்தா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ப.காசிநாதன், மாவட்ட நிர்வாகிகள் சி.பக்கிரிசாமி, பா.பாலசுந்தரம், என் காளிதாஸ், கலியபெருமாள் உள்ளிட்டோர் இன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விபரம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்காடு கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்த பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்கின்ற மாணவ- மாணவியர்கள் அதிகமாக சென்று வருகின்றனர்.

மேலும் பெண்கள் அன்றாட கூலி வேலைக்கு பட்டுக்கோட்டைக்கு சென்று வருகிறார்கள். இந்த இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வருகிறது. இந்த கடையை கட்டக்கூடாது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் அதன் மீதுஎந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.புதிய கடை கட்டப்பட்டு வருவதற்கு காரணமாக வேப்பங்காடு ஆதிதிராவிடர் பகுதியில் கட்டவில்லை, ஏனாதி எல்லையில் உள்ள இடத்தில் கட்டுகிறோம் என்றுஅரசு அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வேப்பங்காடு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை திறந்தால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் .இளைஞர்கள், வேலை பார்க்கின்ற தொழிலாளர்கள் உடல் நலம் சீர் கெட்டு ஏழை, எளிய குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை திறப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News