சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

வட்டார வளர்ச்சி அதிகாரி அவதூறாக பேசியதால், மனமுடைந்த சத்துணவு அமைப்பாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சி.

Update: 2021-07-16 15:30 GMT

சிகிச்சை பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்  

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை செட்டித் தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 29. இவர் பள்ளிகொண்டான் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பணியை சரிவர செய்யவில்லை என்று தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளதாகவும், இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர், கோபாலகிருஷ்ணன் என்பவர் தகாத வார்த்தையில் சரண்யாவை பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டுக்கு சென்று, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சரண்யாவை அவரது கணவர் கார்த்திக் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். காவல்துறையினர் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சரண்யா கணவர் கார்த்திக் யூனியன் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் சரண்யா கொடுத்த புகாருக்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகார் மனுக்கு மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர் சரண்யா குற்றச்சாட்டு கூறியதோடு, தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையிலேயே தானும் தன் குழந்தையும் தற்கொலை செய்து இறக்கப் போவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News