சூலூரில் கஞ்சா விற்ற இருவர் கைது ; 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 102 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து 182.725 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-06-22 14:00 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் துறையினர் கண்ணம்பாளையம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (19) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார்(30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 102 நபர்கள் மீது 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 182.725 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News