கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2024-07-01 10:12 GMT

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் டோரா (30) மற்றும் அபிஷித் டோரா (27) ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அபிஷேக் டோரா மற்றும் அபிஷித் டோரா (27) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இரண்டு நபர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு‌ குற்றவாளிகளான அபிஷேக் டோரா மற்றும் அபிஷித் டோரா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News