பொள்ளாச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி ; மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Coimbatore News- பொள்ளாச்சியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவ மாணவியர் கைகளில் ஏந்தியவாறு பேரணி சென்றனர்.

Update: 2024-06-22 12:45 GMT

Coimbatore News- போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

Coimbatore News, Coimbatore News Today- கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து காவல் துறையினர் பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கியது. காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் இந்தப் பேரணியை தொடங்கி வைத்தார்.

போதை பொருள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோவை சாலை, மத்திய பேருந்து நிலையம், புதிய திட்ட சாலை, வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவ, மாணவிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது மிகவும் கொடூரமான சம்பவம் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது எனவும், கள்ளச்சாராயம் மட்டுமின்றி கஞ்சா, பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதை இளைஞர்கள் மாணவர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News