கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-10 10:45 GMT

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல இ -பாஸ் கட்டாயப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 7 ம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இபாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய ஊட்டி சாலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு தூரி பாலம் சோதனைச் சாவடி, கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி சோதனை சாவடி என இரு இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இ - பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இபாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி இ- பாஸ் எடுத்து பின்னரே அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மேட்டுப்பாளையம் கல்லாறு தூரி பாலம் அருகே செயல்பட்டு வரும் சோதனைச் சாவடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ-பாஸ் நடைமுறை மிகவும் எளிமையாகவும் எளிதாக இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி எளிதாக இ-பாஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் வேண்டி பதிவு செய்த உடனே பயணிகளுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் தொடக்க நாளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதியில் உள்ள வணிகர்கள் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று அச்சமடைந்தனர். ஆனால் இ-பாஸ் சுற்றுலா பயணிகளுக்கு எளிதாகவும் உடனடியாகவும் கிடைப்பதால், தற்போது வணிகரீதியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை” எனக் கூறினார்.

Tags:    

Similar News