புதைந்து கிடந்த யானையின் எலும்பு கூடுகள்‌ ; வனத்துறை விசாரணை

யானையின் எலும்புக்கூடுகள் சிதறி கிடந்ததை கண்டு அதிகாரிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Update: 2024-09-24 09:15 GMT

கண்டெடுக்கப்பட்ட யானையின் எலும்பு கூடுகள் 

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கோவை வனச் சரகத்தில் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் சரகம் அருகில் பட்டா நில காடு ஒன்றில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக புகார் வந்தது. இதன்பேரில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு யானையின் எலும்புக்கூடுகள் சிதறி கிடந்ததை கண்டு அதிகாரிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது யானையின் எலும்புக் கூடு ஒன்று தோண்டப்பட்ட மண்ணில் புதைந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்ததும், அந்த யானையை பிரேத பரிசோதனை செய்த பின்பு அங்கேயே புதைத்ததும் தற்பொழுது அதே இடத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் அந்த யானையின் எலும்புக் கூடுகள் தெரியவந்து உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யானையை பிரேத பரிசோதனை செய்த பொழுது யானையின் தந்தத்தை சேகரித்து வைத்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போது கிடைத்து உள்ள இந்த எலும்பு கூடுகள் அந்த யானையின் உடையது என வனத்துறையினர் விளக்கம் அளித்து உள்ளனர். மேலும் இந்த பட்டா நிலம் வனப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News