மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை போத்தனூரில் குடிநீர் மாசடைந்த குடிநீர் வினியோகம் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-03-03 14:00 GMT

சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்.

கோவை போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் சித்தன்னபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசு அடைந்தும், அசுத்தமாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கோவை மாநகராட்சியிலும், கோவை தெற்கு மண்டலத்திலும் மற்றும் நூறாவது வார்டு தி.மு.க கவுன்சிலரிடமும் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாசு அடைந்த குடிநீர் பாட்டில்களுடன், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த நீரை பயன்படுத்துவதால் நோய் வாய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்தற்கான மருந்து சீட்டுகளை கையில் வைத்துக் கொண்டும், குழாயில் வரும் அசுத்தமான நீரை கையில் ஏந்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களாக மாசு அடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த நீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் முறையாகவும், சுகாதாரமான முறையிலும் விநியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து செல்ல செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News