கோவை மதுக்கரையில் 329 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

Update: 2024-10-18 16:15 GMT

கைது செய்யப்பட்டவர் 

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்து இருப்பதாக மதுக்கரை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் மதுக்கரை காவல் நிலைய காவ‌ல் துறை‌யின‌ர் சம்பவம் இடமான சீராபாளையம் மற்றும் திருமலையாம் பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருந்த சீராபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 209 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல் திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நூர்முஹம்மத் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மேற்படி 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என மொத்தம் சுமார் 329 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News