கொரோனா சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் பில்: மீதி 4 லட்சத்திற்காக உடலை தர மறுத்த கோவை மருத்துவமனை!

கோவையில், ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில் மீதி 4 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே உடலை தர முடியும் என்று தனியார் மருத்துவமனை கறாராக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

Update: 2021-06-03 02:35 GMT

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காதர். இவர், கொரொனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 20 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு கட்டணமாக 20 லட்ச ரூபாயினை மருத்துவமனை நிர்வாகம் பில் போட்டது. இதில் 16 லட்சம் ரூபாயினை, காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சிகிச்சைக்காக இதுவரை, 16 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையிலும் மீதமுள்ள 4லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என்று, மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததோடு, இறந்தவரின் உடலையும் கொடுக்காமல் இருப்பதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரொனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்திரவிட்டார்.

இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கும்படி,  காதரின் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரி சித்திக் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News