கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

கோவையில், 77 மையங்களில் மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-06-14 11:58 GMT

கோவையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும்,  தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதிகளில் 46 பள்ளிகள் என 77 மையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3650 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்றும்,  மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால், பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் சொற்ப அளவிலான மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாவலர்களுடன் தடுப்பு ஊசி செலுத்தி வந்திருந்தனர்.

Tags:    

Similar News