ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் பெற்று தருவதாக மோசடி செய்த இருவர் கைது

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-10-10 10:15 GMT

கைது செய்யப்பட்ட வேல்முருகன்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது. ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாப தொகையை பெற்று தருவதாக கூறி வந்த தகவலின் அடிப்படையில் கார்த்திகேயன் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தார். அந்த பணத்தை மீண்டும் கேட்ட போது மோசடி கும்பல் தராமல் ஏமாற்றி விட்டது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கார்த்திகேயனிடம் மோசடி செய்யப்பட்ட பணம், திருப்பூரை சேர்ந்த வேல்முருகன், மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த அப்பாஸ் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு வந்து அதன் பின்னர் வேறு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூர், நல்லூரி ராக்கிப் பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது30), பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சே்ரந்த அப்பாஸ் (41) ஆகிய 2 பேரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்பாஸ்

இவர்கள் 2 பேரும், கம்போடியா மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடி கும்பலுடன் இணைந்து தங்களது வங்கி கணக்குகளை கொடுத்து உதவியது தெரியவந்தது. ஆன்லைன் பங்கு வர்த்தகம், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி என்பன உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் வெளிநாடுகளில் மோசடி கும்பல் இயங்கும். அப்போது மோசடி செய்யும் பணத்தை இந்த 2 பேரின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து மோசடி செய்து உள்ளனர். இதன்படி வேல்முருகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 கோடி அளவுக்கும், அப்பாசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 கோடி அளவுக்கும் பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. கைதான வேல்முருகன் மீது 91 புகார்களும், அப்பாஸ் மீது 89 புகார்களும் வந்து உள்ளன.

Tags:    

Similar News