மருதமலை அருகே திருநங்கை வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

Update: 2024-01-30 03:15 GMT

கொலை நடந்த இடம்

கோவை தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). திருநங்கையான இவர், மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று தனலட்சுமி மதியம் மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணிக்கு வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து உடனடியாக மாசிலாமணி வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி ஆய்வாளர் கண்ணையன் தலைமையிலான காவல் துறையினர் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணகுமார் மற்றும் உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், கொலையாளியையும் தேடி வருகின்றனர். திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News