கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: நாளை போக்குவரத்து மாற்றம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-31 12:22 GMT

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து கோவை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பார்க் ரோடு ஜி.சி.டி., தடாகம் ரோடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.
  • கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதி பார்க் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில், வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
  • மேட்டுப்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.
  • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு, கோவிலுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தை தாண்டி எந்த வாகனங்களும் செல்ல இயலாது.

காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மற்றும் இதர பேருந்துகள் மற்றும் வாகனங்கள், ஜி.பி., சிக்னல். சத்தி ரோடு, நம்பர் 3 பேருந்து நிலையம் கணபதி, சங்கனூர் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.

காந்திபுரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், கிராஸ்கட் ரோடு, சிந்தாமணி சந்திப்பு, ஹோம் சைன்ஸ் வழியாக சென்று ராஜா அண்ணாமலை ரோட்டில் வலது புறம் திரும்பி அழகேசன் ரோட்டில் உள்ள, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லலாம்.

தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலாகான்வென்ட் பள்ளி, ஜி.சி.டி., லாலிரோடு வழியாக நகருக்குள் வரலாம்.

தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலாகான் வென்ட் பள்ளியில் இருந்து இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர்., ரோடில் எஸ்.பி. ஐ.,ல் வலது புறம் திரும்பி ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.

பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சாலையோர பார்க்கிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டும், வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News