கோவையில் மழை பாதிப்பு புகார்கள் உடனுக்குடன் தீர்வு: மாநகராட்சி ஆணையர் பேட்டி

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-14 05:45 GMT

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் சுமார் 8 அடி அளவிற்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த மழை தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், சகதிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்றுகாலை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், நேற்று கோவையில் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை இன்டென்சிட்டி ரெயின்பால் 16 முதல் 18 சென்டிமீட்டர் வரை பெய்துள்ளது எனவும், இதில் நகரில் சுரங்கப் பாதைகளின் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் உடனடியாக தண்ணீர் அகற்றப்பட்டது எனவும் கிக்கானிக் பள்ளி சுரங்கப்பாதையும் உடனடியாக திறக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். இந்த உப்பிலிபாளையம் சுரங்கப்பாதை கடுமையான மழையால் 8 அடி முதல் 10 அடி வரை தண்ணீர் தேங்கியது எனவும் தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது எனவும், உப்பிலிபாளையம் சுரங்கப்பாதை இன்னும் சிறிது நேரத்தில் போக்குவரத்திற்காக திறந்து விடப்படும் எனவும் தெரிவித்தார். நகரில் கதிரவன் நகர் பகுதியில் சங்கனூர் ஓடையில் சுவர் உடைந்து தண்ணீர் சென்றுள்ளது. உடைத்த பகுதி உடனடியாக அடைக்கப்பட்டது என தெரிவித்தார்.

இதே போல சாலை சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் புத்தகங்களுக்கு மாற்றாக புதிய புத்தகம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். ஆவாரம்பாளையம் பகுதியில் மழை தண்ணீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ள பட்டுள்ளது எனவும், 30 பேர் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும்,மழை நீரில் சேதம் அடைந்த சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும்,கோவை மாநகராட்சியில் உள்ள 6000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் களத்தில் உள்ளனர் எனவும், மக்களிடமிருந்து வரக்கூடிய புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

மழை காரணமாக ஏழு இடங்களில் மரம் சாய்ந்துள்ளது. அடுத்து மழை தொடரும் என்ற நிலையில் மழையை சந்திக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்த அவர், நகரில்15 முதல் 20 இடங்களில் மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது எனவும், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். ஏற்கனவே அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை அந்த இடங்களை பார்வையிட்டு வருகிறேன் என தெரிவித்த அவர்,

ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீரால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு வேண்டிய உபகரணங்கள் , உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.கோவை நகரில் இடியும் நிலையில் உள்ள சுவர்கள்,கட்டிடங்கள் போன்றவை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,கோவை நகரில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துள்ளது என தெரிவித்தார். செல்வசிந்தாமணி குளம் நிரம்புவதற்கு ஒரு அடி முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது எனவும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News