கோவையில் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள்: போக்குவரத்து கழகம் விளக்கம்

அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன.

Update: 2024-01-09 01:45 GMT

போஸ்டர்.

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையிலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன.

தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தினால் மக்கள் சிரமமின்றி பயணிக்க கோவை மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி தொமுச தொழிற்சங்கம் மற்றும் இதர வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர் வைத்து முழுமையாக பேருந்து இயக்கப்படும். வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மாவட்ட காவல் துறையை அணுகி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பாக பொது மக்களுக்கு இடையூறு இன்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News